
த.வெ.க அரசு ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டு வருகிறது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்விலும், அமைச்சர்கள் பொறுப்பேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குச் தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது, த.வெ.க அமைச்சர்கள், 'ஒன்றிய அரசின் உத்தரவாலும் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதாலும்தான் இப்படி நடந்தது' என்று சாக்குபோக்கு கூறினார்கள். டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்தார்.
இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்திலாவது சட்டமன்ற மரபுப்படி த.வெ.க அரசு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த மரபையும் விஜய் அரசு மீறியுள்ளது. ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு.
ஆனால் இன்று, தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த உடனே தேசியகீதம் இசைக்கப்பட்ட பிறகே ஆளுநர் உரையாற்றினார். பின்னர் இறுதியிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு, மரபுகளைத் த.வெ.க அரசு மீறியுள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற மரபுகளை எப்படி அடமானம் வைக்க முடிகிறது? என த.வெ.க அரசுக்கு, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு.
இதற்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உரைக்கு பின்பும் தேசிய கீதமும் இசைக்க வேண்டுமென கடந்த காலங்களில் தான்தோன்றித் தனமாக பேசினார், செயல்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆனால் வழக்கம் போல சட்டமன்ற மரபுகளை காத்து நின்றது தி.மு.கழகம். தற்போதைய DUMMY CM அரசோ, தமிழ்நாடு சட்டமன்ற மரபுக்கு மாற்றாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தொடக்கத்திலேயே தேசிய கீதமும் பாடியுள்ளது.
“‘மாற்றம் - மாற்றம்’’ என வந்துவிட்டு எப்படி இப்படி வெட்கம் சிறிதுமின்றி கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்க முடிகிறது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தாயை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் அடிமைகள் அடி மரத்தை வெட்டிடும் செயலில் இறங்கி அவ்வப்போது தலைகுப்புற கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து மரத்தில் ஏறிக்கொண்டு அதே செயலில் ஈடுபடுகிறது.
வாயை திறக்காத DUMMY CM தன்னையும், தனது போக்கையும் திருத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது.






