Tamilnadu

இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர்.. கைக்குழந்தையுடன் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு..

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பாலுவின் மகன் அஜித் (23). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான சத்யா என்ற இளம் பெண்ணுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவுடன் பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளார். இதில் சத்யா கர்ப்பமாகி கடந்த மே மாதம் கபிலன் என்ற ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதே அஜித் சத்யாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இது குறித்து சத்தியா கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அஜித்தை கைது செய்த காவல்துறையினர் அஜித்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக சிறையில் இருக்கும் அஜித் தனக்கு ஜாமீன் வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இரண்டு முறை இவரது ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிபதி, இன்று மீண்டும் ஜாமீனுக்கு அவர் மனு தாக்கல் செய்தபோது ஏமாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு கைக்குழந்தையையும் ஏற்றுக் கொண்டால் ஜாமீன் தருவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் நீதிபதி அனுப்பி வைத்த வழக்கறிஞர்கள் மற்றும் சத்யாவின் குடும்பத்தினர் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு மாதம் கைக்குழந்தையுடன் இருந்த சத்யாவை அஜித் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

Also Read: 90 கிட்ஸ் vs 2K கிட்ஸ் .. 10 வருட இடைவெளி: இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?