Tamilnadu

கோமாளி வேடமிட்டு பாடம் எடுத்து சொல்லி அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியை.. பாடத்தை இப்படியும் நடத்தலாமா ?

பொதுவாக மாணவர்களுக்கு பிடிக்காத இரண்டு பாடங்கள் என்றால், அது ஆங்கிலம், கணிதம் தான். கணக்கு என்ற பெயரை கேட்டாலே அலறி அடித்து ஓடுபவர்கள் அப்போது மட்டுமல்ல, இப்போதும் இருக்கிறார்கள்.. எப்போதும் இருப்பார்கள்.. கணக்கை பிடிக்காததற்கு இன்னொரு காரணம் என்றால், அது பி.இ.டி. வகுப்பையும் கணித ஆசிரியர் கடனாக வாங்கிவிடுவார். இதனாலே நாம் அனைவருக்கும் கணக்கு பாடம் பிடிக்காமல் போனது.

இருப்பினும் நமது வாழ்வியலுக்கு கணக்கு மிகவும் இன்றியமையாததாக திகழ்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கணிதம் கற்றுக்கொடுப்பதில் மெனைக்கெடுவதில்லை. ஆனால் தற்போது அதற்கு விதிவிலக்காக கணக்குப்பாடத்தை கசப்பு காயாக அல்லாமல், இனிப்பு கனியாக சுவையூட்டி மாணவர்களுக்கு ஊட்டி விடுகிறார் காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் யுவராணி.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி தான் மாத்தூர். இங்கிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிபவர் யுவராணி. அண்மையில் நல்லாசிரியர் விருது பெற்ற இவர், மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியாராக திகழ்ந்து வருகிறார். காரணம் இவரது பாடம் சொல்லிக்கொடுக்கும் விதம் தான்.

சிறு குழந்தைகளுக்கு பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, கதை சொல்லிக்கொடுத்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் வீடியோ அடிக்கடி வைரலாகி வரும். ஆனால் இவரோ, 8,9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே யுத்தியை கையாண்டு வருகின்றார். அவர்களுக்கு புரியும் விதமாக கணித மேதை ராமானுஜர், மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி என புதுப்புது வேடமிட்டு, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, கதை சொல்லி பாடம் எடுத்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மாணவர்களுக்கு கற்றுக் கொள்ள எப்பொழுதும் ஆர்வம் இருந்து கொண்டு தான் இருக்கும், அதனால் நாம் தான் அவர்களுக்கு பிடிப்பதை போன்று கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்வார்கள். கணக்கு பாடத்தை எளிதாக புரிய வைக்க தினசரி ஒரு வேடமிட்டு வருகிறேன்.

தினமும் நாம் வாழ்வியலோடு கணிதம் என்பது பின்னி பிணைந்து கொண்டிருக்கிறது. எனவே, கணிதத்தை தனது வாழ்வியலோடு எவ்வாறு பொருத்திக் கொள்வது, என்கிற முறையை மாணவர்களுக்கு எளிதாக புரிய வைக்க வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம்" என்று கருத்து தெரிவித்தார்.

ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை யுவராணியின் இந்த முயற்சி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Also Read: ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தினால் கிடைத்த பலன்.. சொன்னதை செய்து காட்டிய முதல்வர் - நெகிழும் தாயார் !