Tamilnadu

“இளம் பெண் கைலாசாவிற்கு கடத்தப்பட்டாரா?” - நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் நுழைந்து போலிஸ் தீவிர விசாரணை!

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு அயல்நாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமத்தில் சிறியவர்கள், இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் நித்தியானந்தாவின் சத்சங்கத்தைக் கேட்டும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டும் சீடர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்டு பிடதியில் ஆசிரமம் அமைத்த நித்தியானந்தாவிற்கு கர்நாடகாவில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீநாகேஷ் மற்றும் அவரது மனைவி ஓய்வு பெற்ற பேராசிரியர் மாலா இவர்களது மூத்த மகள் வைஷ்ணவி (24) மற்றும் அவரது இளைய மகள் வர்தினி (22) ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக நித்யானந்தாவின் சீடர்களாக இருந்து பிடதி ஆசிரமத்தில் பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் ஸ்ரீநாகேஷ் அவரது மனைவி மாலா மற்றும் மூத்த மகள் வைஷ்ணவி ஆகியோர் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர். இவர்களது இளைய மகள் வர்தினி மட்டும் ஆசிரமத்திலேயே தங்கி தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கொரோனா காலத்தில் தனது மகளை பார்க்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்காத நிலையில், செய்வதறியாமல் இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்த ஸ்ரீநாகேஷ் குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்ததாகவும், அதன் அடிப்படையில் கர்நாடக காவல் துறையினர் பிடதி ஆசிரமத்தில் தேடியதில் அவரது மகள் இல்லை என்று கூறப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநாகேஷ் குடும்பத்தினர் தனது மகள் திருவண்ணாமலைக்கு கடத்தப்பட்டு இருப்பாரோ? என்று கருதி இன்று திருவண்ணாமலை நித்தியானந்த ஆசிரமத்திற்குள் வந்த அவர்களது குடும்பத்தினரை ஆசிரம நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்காமல் அலைகழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினர் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் ஆய்வாளர் ஹேமமாலினி தலைமையில் போலிஸார் இரவு நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் நுழைந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நித்தியானந்த ஆசிரமத்தில் இருந்த அனைத்து அறைகளையும் சோதனையிட்டு தீவிரமாகத் தேடினர். நித்தியானந்த ஆசிரமத்திற்குள் காவல்துறையினர் நுழைந்ததை அறிந்த சம்பவம் கிரிவலம் சென்ற பக்தர்கள் நித்தியானந்த ஆசிரமம் முன்பு குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடத்திய தேடுதலில் வர்தினி திருவண்ணாமலையிலும் இல்லை என அறிந்த ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினர் மிகுந்த சோகத்துடன் ஆசிரமத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர்.

கைலாச நாட்டிற்கு இவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது கடத்தப்பட்டு மறைத்து வைத்துள்ளார்களா? என்ற குழப்பத்தில் யாரிடமும் பேசாமல் ஸ்ரீ நாகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து கண்ணீர் மல்க மவுனமாக சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ச்சியாக நித்தி ஆசிரமத்தில் உள்ள இளம் பெண்களையும், இளைஞர்களையும் மீட்க ஆண்டிற்கு ஒருமுறை இதுபோன்று சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: புதிதாக 2 ரன்வேக்கள்.. ஒரு மணிநேரத்தில் 50 விமானங்களை இயக்க பிளான்: புதுப்பொலிவு பெறும் சென்னை ஏர்போர்ட்!