Tamilnadu

“முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை.. தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்” : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் அருகே மான்பூண்டி ஆற்றில் முட்புதரின் நடுவில் குழந்தையின் அழுகுரல் சப்தம் வந்து கொண்டே இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்களின் காதில் விழவே மக்கள் சென்று பார்த்த போது, பச்சிளம் பெண் குழந்தை முட்புதரில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குழந்தையை வீசிச் சென்ற தாய் யார் என்ற விசாரணை நடைபெற்று வந்த சிறிது நேரத்தில், ரத்தத்துடன் உடலில் காயங்களோடு அங்குள்ள கோவில் அருகே பெண் ஒருவர் மயக்க நிலையில் படுத்து இருந்தார். பின்னர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையில் அவர் தான் அந்த குழந்தையின் தாய் என்பது தெரியவந்தது. போலிஸார் நடத்திய விசாரணையில் அவர் மணப்பாறை அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த சசிகலா என்பதும் 38 வயதான அந்த பெண்ணிற்கு ஏற்கனவே, 8 வயதில் ஒரு மகள் இருப்பதோடு, கணவன் இறந்து விட்ட நிலையில் திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.

மேலும் இரண்டாவதாக பழகி வந்தவருடன் ஏற்பட்ட, தொடர்பினால் கர்ப்பமடைந்து சொந்த ஊருக்கு வந்த இவரை உறவினர்கள் ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை விட்டு வந்த போது மாமுண்டி ஆறு அருகே பிரசவ வலி ஏற்பட்டதால் வேறு வழியின்றி முட்புதரில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டு குழந்தையை அங்கேயே போட்டு விட்டு அருகில் உள்ள கோவில் வளாகத்திற்கு சென்று படுத்துக் கொண்டதும் தெரியவந்தது. உடல்நிலை பாதிக்கபட்டு இருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாய் – சேய் இருவருக்கும் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. உடலில் தொப்புள் கொடியோடு ஈரம் கூட ஈஞ்சாமல் குழந்தை இருக்க ரத்தத்துடன் தாய் படுத்திருக்க யாருமின்றி முட்புதரில் நடந்த பிரசவ நிகழ்வு அனைவரின் நெஞ்சங்களையும் உருக்குலையச் செய்திருக்கின்றது.

Also Read: “சந்திரமுகியாகவே மாறிவிட்டார் பன்னீர்..” : ‘இது திராவிட மாடல் அரசா?’ என கேட்பவர்களுக்கு முரசொலி பதிலடி!