Tamilnadu

“உடன்பிறந்த தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்” - தாயின் கண்முன்னே நடந்த விபரீதம்!

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகன்கள் ஜெகதீசன் மற்றும் இவரது தம்பி கோதண்டராமன். முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீசனுக்கு அவரது தம்பிக்கு இடையே அடிக்கடி சண்டை மூண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் செய்ய இருப்பதால், கோதண்டராமன் சொத்தில் தனது பங்கை பிரித்து தருமாறு அண்ணன் ஜெகதீசனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு கோதண்டராமன் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார் .

இந்நிலையில், நேற்று பிற்பகல் இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெகதீசன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கோதண்டராமனை நேருக்கு நேராக மார்பில் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் போலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த தம்பி கோதண்டராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறில் உடன்பிறந்த தம்பியை முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திராவிட மாடல் ஓசி மாடலா? பூர்வீகமே தட்சணையில்.. ஓசியைப் பற்றி பேசலாமா? - முரசொலி ஏடு தலையங்கம்!