Tamilnadu

“காலையில் கல்லூரியில் படிப்பு.. மாலையில் தோழியுடன் சேர்ந்த செயின் பறிப்பு” : காதல் ஜோடி சிக்கியது எப்படி?

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கலிக்க நாய்க்கன்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை செய்தனர். பிறகு அவரது வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தங்கக் கட்டி ஒன்று இருந்தை கண்டுபோலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் சோமயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பதும், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் இவர்தான் என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் காலையில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு, பிறகு மாலையில் தனது தோழியுடன் சேர்ந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி உண்மையும் வெளிவந்துள்ளது.

இதையடுத்து பிரசாந்துடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த அவரது தோழி தேஜஸ்வினியையும் போலிஸார் பிடித்து விசாரணை செய்தனர். பிறகு இருவரையும் கைது செய்தபோலிஸார் எந்தெந்த பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: வீட்டின் கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!