Tamilnadu

அடுத்தடுத்து உயிர் நண்பர்கள் தற்கொலை.. மன உளைச்சலில் 11ஆம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய் குமார். இவர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அக்ஷய் குமார், தாய் வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். மேலும் குடும்ப வறுமை காரணமாகப் பள்ளி முடித்ததும் பகுதி நேரமாக கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது இவருக்கு வட மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வடமாநில இளைஞர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் அக்ஷய் குமார் கடும் மன உளைச்சலில் இருந்துவந்தார். இதிலிருந்து மீண்டு வருவதற்குள் அவரது பள்ளி நண்பரும், கடந்த மாதம் பள்ளியின் மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்தடுத்து இரண்டு நண்பர்கள் தற்கொலை செய்துகொண்டது அக்ஷய் குமாருக்கு மனதளவில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லாமல் எந்த நேரமும் நண்பர்கள் புகைப்படங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அக்ஷய் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இறந்த சோகத்தில் பள்ளி மாணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல துணிக்கடை உரிமையாளர் மகன் கைது.. நடந்தது என்ன?