Tamilnadu

பை நிறைய லட்சக்கணக்கில் பணம்: ரோந்து சென்ற போலிஸிடம் சிக்கிய தெலங்கானா நபர்கள்; பெரம்பூரில் நடந்தது என்ன?

சென்னை ஓட்டேரி காவல் நிலைய போலிஸார் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்து இறங்கிய சந்தேகத்திற்கு இடமான இரு நபர்கள் கையில் பையுடன் வெகுநேரமாக ரயில் நிலையம் அருகில் நின்றுகொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பார்ப்பதற்கு வெளிமாநில நபர்கள் போல் தோற்றம் கொண்டதால் சந்தேகமடைந்த ஓட்டேரி போலிஸார் அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பேசியுள்ளனர்.

இதையடுத்து சந்தேகமடைந்த ஓட்டேரி போலிஸார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இருவரையும் ஓட்டேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் இருவரும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அதில் ஒருவர் பெயர் நாகராஜ். தெலங்கானா மாநிலம் குடிமல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு பெயர் நரேந்திர குமார். தெலங்கானா மாநிலம் கம்பம் நகரை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் கைப்பையில் வைத்திருந்த ரூபாய் 60 லட்சத்து முப்பத்தி ஓராயிரம் ரூபாயை ஓட்டேரி போலிஸார் கைப்பற்றி சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் இருந்த பணம் ஹவாலா பண பரிமாற்றத்திற்காக கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அவர்கள் யார் எதற்காக இவ்வளவு பணத்துடன் சென்னை நகருக்குள் வந்துள்ளனர். வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்ற கோணத்தில் சென்னை ஓட்டேரி போலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.