Tamilnadu
6 மேல் தளம்,1000 படுக்கைகள்.. ரூ.230 கோடியில் உதயமாகும் பன்னோக்கு மருத்துவமனை: அடிக்கல் நாட்டிய முதல்வர்!
சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு கட்டடம் கட்ட 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 1000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இந்த உயர்சிறப்பு மருத்துவமனையில், இதயவியல் துறை, மூளை நரம்பியல் துறை, கதிர்வீச்சு மற்றும் குறுக்கீட்டு கதிர்வீச்சு துறை, குடல் மற்றும் இரைப்பை மருத்துவத் துறை, நோய் எதிர்ப்பு குருதியியல் துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, சிறுநீரக மருத்துவத் துறை ஆகிய மருத்துவ உயர் சிறப்பு பிரிவுகளும்; இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை ஆகிய அறுவை சிகிச்சை உயர்சிறப்பு பிரிவுகளையும் கொண்டு அமைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ, வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் .கே. கணபதி, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் : ஐ.நா-வில் நிறைவேறிய தீர்மானம் !
-
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் பெயர் மாற்றப்படும் : யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தால் அதிர்ச்சி!
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த சாய் சுதர்சன் : IPL தொடரில் எழுச்சி பெற்ற தமிழ்நாடு வீரர் !
-
ஆயுதத்தால் கொடூரமாக தாக்கப்பட்ட பாஜக நிர்வாகி : திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் அதிரடி கைது !
-
“பாஜக பெண்களை போற்றும் லட்சணம் இதுதான்”: பிரிஜ் பூஷன், ரேவண்ணா, ஆனந்த் போஸ் விவகாரத்தில் முரசொலி ஆவேசம்!