Tamilnadu

அடகு வைத்த நகைகளில் நூதன மோசடி செய்த ‘கில்லாடி’ நபர் - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் - நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் அடகு வைத்த நகைகளில் இருந்து சிறுசிறு கன்னிகளாக நகை மதிப்பீட்டாளர் திருடி வந்தது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் எஸ்.பி.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நகை மதிப்பீட்டாளராக சேகர் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த வங்கியில் கேத்தனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகளை தொடங்கி வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

விவசாயிகள் அவசர தேவைக்காக தங்கள் நகைகளை இங்கு அடமானம் வைப்பது வழக்கம். நகைகளை அடமானம் பெறும்போது நகை மதிப்பீட்டாளர் சேகர், சிட்டா, மற்றும் ஆதார் அட்டை நகல் வழங்கினால் குறைந்த வட்டியில் நகைக்கடன் கிடைக்கும் என கூறியதை நம்பிய விவசாயிகள் அவரிடம் நகையை கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள்.

அப்போது அதில் ஒரு சிறு பகுதியை வெட்டி திருடி உள்ளார். தொடர்ச்சியாக இது நடைபெற்று வந்த சூழலில் அடகு நகையை மீட்ட சிலர் நகையின் அளவு மாறி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகையின் எடையை சோதனை செய்தததில் கடையில் புதிதாக வாங்கும்போது இருந்த நகையின் எடையும் அடகு வைத்து மீட்கப்பட்ட பின் இருந்த நகையின் எடையிலும் வித்தியாசம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் சில நாட்களுக்கு முன்பு வங்கியை முற்றுகையிட்டு வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த நகை மதிப்பீட்டாளர் சேகரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது திருடியதை ஒப்பு கொண்டுள்ளார். ஆனால், வங்கி நிர்வாகத்தின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வங்கி நகை மதிப்பீட்டாளர் சேகரை இன்று போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி.ஐ வங்கியில் அடகு வைத்த நகைகளில் சிறுசிறு பகுதிகளை வெட்டி நூதனமாக திருடிய நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தாகமா இருக்கு.. பரிதாபமாக பேசி கத்தி முனையில் கொள்ளை;10 லட்ச நகை, பணத்தை ஆட்டையப்போட்ட போலி டெலிவரி பாய்