Tamilnadu

தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவர் எடுத்த விபரீத முடிவு - நடந்தது என்ன?

உடுமலை அருகே தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் கலைச்செல்வன் (16) என்ற மாணவர் நேற்று வகுப்புத் தேர்வின்போது காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை ஆசிரியர் கண்டித்துள்ளார்.

இதையடுத்து மாணவர் கலைச்செல்வன் பள்ளியின் முதல் தளத்திற்கு சென்று அங்கிருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவரை சக மாணவர்களும், ஆசிரியர்களும் உடனடியாக மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். புகாரின் பேரில் கணியூர் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: UPS-ல் தீ.. மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி - செல்ல நாயும் பலியான சோகம்!