Tamilnadu

“பெண்கள் பெயரில்தான் வீடு வழங்கப்படும்” : மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க. மகளிரணியின் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிகமானோர் கல்வி பயில்கின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை தி.மு.க கொண்டுவந்தது.

அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40%ஆக உயர்த்தியுள்ளோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பேருந்து பயணத்தின்போது பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான், என் வாழ்நாளின் மகிழ்ச்சி. பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை தி.மு.க ஆட்சிதான் வழங்கியது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக 1929ல் தந்தை பெரியார் கொண்டுவந்த தீர்மானங்களை கலைஞர் 1989ல் சட்டமாக்கினார். இதுதான் பெண்ணினத்திற்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக்கொடை. இதுதான் திராவிட மாடல்!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இனி வழங்கப்படக்கூடிய வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும்.

பெண்களை சொற்களில் போற்றாமல் வாழ்க்கையில் போற்றுவோம். பெண்ணுரிமையின் அடிநாதமான பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்வோம்!” என உரையாற்றினார்.

Also Read: சாட்சிகள் பல்டி அடித்தும் நீதியை போராடி பெற்றுத்தந்த வழக்கறிஞர் ப.பா.மோகன்: இது சமூக நீதிக்கான போராட்டம்!