Tamilnadu

“காலப்போக்கில் அ.தி.மு.க என்ற கட்சியே இருக்காது.. தி.மு.கவில் இணைந்து விடுவார்கள்” : ஐ.பெரியசாமி பேட்டி!

காலப்போக்கில் அ.தி.மு.க என்ற கட்சியே இருக்காது, அது தி.மு.கவில் சங்கமம் ஆகிவிடும் என்று அமைச்சரும், தி.மு.க துணை பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் மாநகராட்சியின் 23ஆவது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் படுதோல்வி அடைந்தார். எடப்பாடி நகராட்சியையும் தி.மு.க கைப்பற்றியுள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த வார்டிலும் பெரியகுளம் நகராட்சியிலும் அ.தி.மு.க தோல்வியைச் சந்தித்துள்ளது. எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் பேரூராட்சியை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது தி.மு.க.

இதைத்தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் வென்ற அ.தி.மு.கவினர் பலர் தி.மு.கவில் இணைந்து வருகின்றனர். இஇந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30 முதல் 40 சதவீத இடங்களில் அ.தி.மு.க டெபாசிட் இழந்துள்ளது.

அ.தி.மு.கவில் உள்ள தொண்டர்கள் தாய் கழகமான தி.மு.கவில் இணைந்து விட்டார்கள். இதுதான் அக்கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணம்.

தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 80 சதவீத வாக்குகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக விழுந்தவை. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணி தமிழகத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவை. இதை உணர்ந்தே மக்கள் தி.மு.கவிற்கு வாக்களித்தனர். காலப்போக்கில், அ.தி.மு.கவும், தி.மு.கவில் சங்கமம் ஆகிவிடும்” எனத் தெரிவித்தார்.

Also Read: மைக்கேல்பட்டி, ஹிஜாப், கோவை, மயிலாப்பூர், ஒத்த ஓட்டு : சரமாரியாக சம்பவம் செய்த மக்கள் - வென்றது தி.மு.க!