Tamilnadu

பூ கட்டும் நூலால் கழுத்தை அறுத்துக் கொன்ற நண்பர்கள்.. வெளிவந்த ‘பகீர்’ காரணம்!

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தவர் அருளானந்தம் (38). இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் பூக்கடையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக போலிஸாக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆராய்ந்தபோது சில ஆதாரங்கள் போலிஸாருக்கு கிடைத்தது.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஒரு கடையில் பழுடைந்த சிசிடிவி கேமிராவில் சில விநாடிகள் மட்டும் ஓடும் காட்சிகளில் கிடைத்த உருவங்களை பக்கத்து கடைகளில் காட்டி போலிஸார் விசாரித்ததில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்துகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் வைத்திக்குப்பம் பாலாஜி (30) மற்றும் பிள்ளை தோட்டம் சிவபாலன் (29) ஆகிய 2 பேரை போலிஸார் கைது செய்தனர்.

பாலாஜி உண்டியல் திருட்டு வழக்கில் தொடர்புடையவர். சிவபாலன் பூக்கட்டுபவர். ஒரே கடையில் வேலை செய்த மூன்று பேரும் இரவு மது அருந்தியபோது பாலாஜியை பார்த்து "உண்டியல் திருடன்" என அருளானந்தன் கேலி செய்துள்ளார். சிவபாலனையும் என்னை விட நன்றாக உன்னால் பூ கட்ட முடியுமா என சீண்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அருளானந்தனை பூ கட்ட பயன்படுத்தப் படும் நைலான் நூலால் கழுத்தை அறுத்தும், கத்தியால், மார்பு, வயிறு, உள்ளிட்ட பகுதிகள் குத்தியும் கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பூ மார்க்கெட்டில் இரவு நேரத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதல் விவகாரம்.. மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை : நாகையில் நடந்த சோகம் !