Tamilnadu

அறங்காவலர் நியமனம்: ”தற்போதைய அரசு முன்வந்துள்ளது; கொஞ்சம் காத்திருங்கள்” - மனுதாரருக்கு ஐகோர்ட் அறிவுரை!

கோவில் அறங்காவலர்கள் நியமனத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி கோவிலை நிர்வகிக்கும் நபர்களாக அறநிலையத்துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், 97 சதவீத கோவில்கள் அறங்காவலர்கள் இல்லாமல் செயல்படுகின்றன என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அறங்காவலர்கள் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்களின் பதவிகாலம் 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பதவிகாலம் முடிந்த 6 மாவட்டங்களில் மீண்டும் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அதிக வருமானம் வரக்கூடிய 314 கோவில்களில் மட்டும்தான் அரசு நியமிக்க வேண்டும் என உத்தரவிடவில்லை என்றும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

15 ஆண்டுகளாக முறையாக நிரப்பப்படாத அறங்காவலர் இடங்களை நிரப்ப தற்போதைய அரசு முன்வந்துள்ளபோது, அந்த பணிகளை முடிக்க சில காலம் காத்திருக்க வேண்டுமென மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

ஆறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எத்தனை கோவில்கள் உள்ளன, எத்தனை கோவில்கள் பரம்பரை அறங்காவலர்களின் கீழ் வரும், அறங்காவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர் காலியிடங்கள் எத்தனை உள்ளன, காலியிடங்களை நிரப்புவதற்கான திட்டமிடல் என்ன என்பது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: "OPS எப்போவாச்சும் உண்மைய பேசுவாரு" : தி.மு.கவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட ஓ.பன்னீர்செல்வம்!