Tamilnadu

“சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்வது தமிழ்நாட்டில் எடுபடாது” : பரப்புரையில் பாஜக-விற்கு அமைச்சர் பதிலடி !

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிரச்சாரம் செய்து வருகிறார் . கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தொடர்ச்சியாக களக்காட்டில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேரடித்திடலில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், களக்காடு தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்து தற்போது நகராட்சியாக தரம் உயர்ந்து உள்ளது. 27 வார்டுகள் உள்ளன. இங்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க நடந்து கொண்டிருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி உள்ளாட்சியில் தொடர வேண்டும்.

அரசுக்கு சாதகமானவர்கள் வெற்றிபெற்றால்தான் அனைத்து திட்டங்களையும் மக்களுக்காக கேட்டுப் பெற முடியும், மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லமுடியும் ஊழல் செய்தவர்களும், மத அரசியல் செய்பவர்களும் உங்களைத் தேடி வருவார்கள். கவனமாக இருந்து சரியான நபர்களை தேர்தெடுங்கள். தமிழகத்தில் சாதி மதத்தை வைத்து அரசியல் செய்வது எந்தக்காலத்திலும் எடுபடாது. இங்கு திராவிட இயக்கங்கள்தான் நிலைத்து நிற்கும்.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு நடக்கும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வள்ளியூர், நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

Also Read: “தவழ்ந்து சென்று முதல்வர் பதவிக்கு வந்த பழனிச்சாமிக்கு விவாதிக்க எந்த அருகதையும் இல்லை” : ஐ.லியோனி சாடல்!