Tamilnadu

பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது : சுயவிளம்பரத்திற்காக செய்ததாக போலிஸ் தகவல்!

சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து R-1 மாம்பலம் காவல் நிலைய போலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், பழைய குற்றவாளி வினோத் என்ற கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது.

அதன்பேரில் காவல்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, குற்றவாளியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சுயவிளம்பரத்திற்காக, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதாக தெரிவித்துள்ளார். மத ரீதியாகவோ, அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும், அடிக்கடி குடிபோதையில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வினோத் மீது, E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு வழக்குகளில் இந்த நபருக்கு தொடர்பு உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: சைக்கிளை திருடி தப்பிய இளைஞன்; நொந்துப்போய் போலிஸில் புகார்; சிறுவனுக்காக களத்தில் இறங்கிய துணை ஆணையர்!