Tamilnadu

‘நீட்’க்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் முதல்வரைச் சந்தித்து ஆந்திர மாணவர் நன்றி: நெகிழ்ச்சி சந்திப்பு!

‘நீட்’ தேர்வுக்கு சட்டப்போராட்டம் மற்றும் பல வகைகளில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ‘நீட்’ தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர் சந்தித்து தமது நன்றியையும், ஆதரவையும் தெரிவித்தார்.

இந்தியா போன்ற ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள் வாழும் நாட்டில், சாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை நிலவும் நாட்டில், ‘நீட்’ போன்ற பொது நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு தடையாக விளங்குகிறது.

அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலையும் பெற்றதோடு, உச்சநீதி மன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது. அப்படிப் பெற்ற கல்வி உரிமையை ‘நீட்’ தேர்வு பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் ‘நீட்’ தேர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

‘நீட்’ தேர்வு விலக்கு கோரி முதல்வரின் நடவடிக்கை !

இந்தியப் பிரதமர் அவர்களை 17.6.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவு 13.9.2021 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அச்சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காத்திட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆந்திர மாநில மாணவரும், முதல்வருக்கு ஆதரவு!

இந்நிலையில், நேற்று (3.2.2022) தலைமைச் செயலகம் வரும் வழியில், டி.டி.கே.சாலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் என்.சதிஷ், ‘CM SIR HELP ME’ என்ற பதாகையுடன் சந்தித்து, முதலமைச்சர் அவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருவதற்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவையும் தெரிவித்தார். மேலும், தான் ஆந்திரமாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், ‘நீட்’ தேர்வு காரணமாக மருத்துவப்பட்டப் படிப்பு படிக்க இயலாமல் போய்விட்டது, ஆகையால் உங்கள் பேராதரவு ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இந்திய அளவில் இதற்காக குரல் கொடுத்து வருகிறேன்!

முதலமைச்சர் அவர்கள் அம்மாணவனிடம் ‘நீட்’ தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட் டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, அம்மாணவனுக்கு நன்றி தெரிவித்து, அகில இந்திய அளவிலும் இதற்காக குரலை தான் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அம்மாணவரும், முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார்.

Also Read: சுயநிர்ணய உரிமையே எங்களின் தேவை: இறந்து 53 ஆண்டுகள்.. ஆனால் இன்றும் ஆள்கிறார் ‘அண்ணா’- சிறப்புக் கட்டுரை!