Tamilnadu

பிரசவ வலியால் துடித்த மலைவாழ் பெண்.. தக்க நேரத்தில் உதவிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ளது பர்கூர் மலைப்பகுதி. இங்கு மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சித்ரா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் மலைப்பகுதிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் சித்ராவை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அப்போது, பிரசவ வலி அதிகரித்ததால் அவர் வலியால் துடித்துள்ளார். இதனால் வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் ஊழியர் சிவா சித்ராவிற்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாய் மற்றும் குழந்தையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் தாமதிக்காமல் தக்க சமயத்தில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கு மருத்துவர்களும், மலைவாழ் மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Also Read: “அப்பா கல் குவாரியில் கூலி வேலை.. அரசு பள்ளியில் படித்து டாக்டர் ஆகிறார் ஏழை மாணவி”: நெகிழ்ச்சி சம்பவம்!