Tamilnadu

அரபு நாட்டுக்கு ஹவாலா பணம் கடத்தலா? சென்னை ஏர்போர்ட்டில் கையும் களவுமாக சிக்கிய பயணி; ₹1.15 கோடி பறிமுதல்

சாா்ஜா செல்லும் விமானத்தில் பெருமளவு வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக பெங்களூரில் உள்ள DRI அலுவலகத்திலிருந்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறையினா் சென்னையிலிருந்து சாா்ஜா, துபாய், அபுதாபி செல்லும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனா்.

இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து சாா்ஜா செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான 5 பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 4 பயணிகளின் உடமைகளில் வெளிநாட்டு கரண்சி எதுவும் இல்லை.

ஆனால் கா்நாடகாவைச் சோ்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவரின் சூட்கேஸ்சில், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா் கரண்சிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து அந்த பயணியின் பயணத்தை சுங்கத்துறையினா் ரத்து செய்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சூட்கேஸ்சில் மறைத்து மறைத்திருந்த அமெரிக்க டாலா் கரண்சிகளை கணக்கிட்டனா்.

Also Read: ”குத்தகை பணத்தை கொடுக்காமல் உள் வாடகைக்கு விட்ட பிரபல ஹோட்டலுக்கு சீல் வைப்பு” - தஞ்சை ஆட்சியர் அதிரடி!

இந்திய மதிப்பிற்கு ரூ.1.15 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணம் இருந்ததை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். அதோடு அந்த பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினா். அப்போது இந்த பணம் அனைத்தும் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்று தெரியவந்தது. மேலும் இந்த பணத்தை எடுத்து சென்று தற்போது சுங்கத்துறையிடம் சிக்கியிருப்பவா், கூலிக்காக பணத்தை எடுத்து செல்பவா் என்று தெரியவந்தது.

அதனால் யாரோ ஒரு முக்கிய நபா் இந்த பணத்தை இவா் மூலமாக வெளிநாட்டிற்கு கடத்துவது தெரியவந்தது. இதனால் அந்த ஹவாலா பணத்திற்கான உரிமையாளா் யாா்? என்று தொடா்ந்து சுங்கத்துறையினா் விசாரணை நடத்துகின்றனா். சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஒரு பயணியிடமிருந்து ரூ.1.15 கோடி மதிப்புடைய ஹவாலா பணம் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அவர் சாப்பிட்டு போனதுக்கு எனக்கு எதுக்கு 14,000க்கு பில்? - ம.பி., ஆளுநர் வருகையால் அப்செட்டான இளைஞர்!