Tamilnadu

திருட்டு கும்பலால் கொல்லப்பட்ட SI பூமிநாதன் குடும்பத்துக்கு உதவி செய்த பிச்சைக்காரர்; நெகிழ்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல்துறை சிறப்பு ஆய்வாளராக இருந்த பூமிநாதன் கடந்த மாதம் ஆடு திருடர்களை மடக்கி பிடித்தார். அப்போது அந்த திருட்டுக்கும்பல் சிறப்பு காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இதையடுத்து போலிஸார் காவலர் பூமிநாதனை கொலை செய்த ஆடு திருட்டு கும்பலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் உயிரிழந்த பூமிநாதனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் பிச்சை எடுக்கும் பாண்டியன் என்பவர் காவலர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "காவலர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனவேதனையை அளித்தது. அவரது குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன்.

இதையடுத்து பொதுமக்களிடமிருந்து பிச்சையாக பெற்ற பணம் ரூ.30 ஆயிரத்தை அவரது குடும்பத்திற்கு வழங்கும்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்" என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது பாண்டியன், தான் பிச்சையாக பெற்ற ரூ.3.40 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு மதுரை ஆட்சியரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது” : கொலையாளிகள் சிக்கியது எப்படி?