Tamilnadu

DGPயின் திடீர் விசிட்.. பரபரப்பான காவல் நிலையம்- குற்றங்கள் நடக்காமல் தடுக்க அறிவுரை கூறிய சைலேந்திரபாபு!

கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக காவல்துறையினருக்கான 61-வது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடைபெற்றன. இதில் சென்னை பெருநகர காவல்துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

இதன் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு கோவையிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் திடீரென ஒரு காவல் நிலையத்திற்குள் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு செல்லும் வழியில் கோவில்பாளையம் காவல் நிலையத்துக்கு சென்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு, அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் டி.ஜி.பியை வரவேற்றனர்.

அப்போது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரங்கள், குற்றச் சம்பவங்கள் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரோந்து பணி உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலிஸாருக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், காவல் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் போலிஸாருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக தருமபுரி சென்றார். சேலத்தில் இருந்து தருமபுரி செல்லும் வழியில் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல, டி.ஜி.பி சைலேந்திரபாபு தற்போது காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: இனி திடீர் ஆய்வு, சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் - சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு : எதற்காக தெரியுமா?