Tamilnadu

கணக்கில் வராத ரூ. 2.16 கோடி.. தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் நடந்த ரெய்டில் சிக்கிய பணம், நகைகள்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ 2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்நிலையில் இன்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்குச் சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்றது.

மேலும் சென்னையில் ஈ.சி.ஆர் பனையூரில் உள்ள தங்கமணி இல்லத்திலும், ஷெனாய் நகர், அரும்பாக்கம், கரையான்சாவடி உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

69 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்போன், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்புடைய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

தங்கமணி வீட்டில் சோதனைக்குப் பிறகு ஆவணங்களை எடுத்துச் சென்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகனத்தை அ.தி.மு.கவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: 69 இடங்களில் ரெய்டு.. முறைகேடாக ரூ.4.85 கோடி சொத்துக்கள் குவிப்பு: சிக்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி!