Tamilnadu

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.14 லட்சம் மோசடி.. அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேருக்கு வலைவீச்சு!

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்துக் குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.

இந்நிலையில், கரூரில் பட்டதாரிக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரை போலிஸார் தேடி வருகின்றனர்.

கரூர் வடக்கு ஆணடாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பட்டதாரி சிவகுமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 5 பேர் தன்னிடம் ரூ.14 லட்சம் பெற்றுக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான போலி பணி நியமன ஆணையை வழங்கியதாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸில் புகார் செய்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் செய்துவரும் தங்கவேல் மற்றும் இவரது மனைவி சுதா, மற்றொரு மனைவி ஷர்மிளா மற்றும் தங்கவேலின் அண்ணன் மகள் சங்கீதாவும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகிய ஐந்து பேர் குறித்து போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடந்தது அம்பலமானது.

இதனையடுத்து போலிஸ் இன்ஸ்பெக்டர் பியூலாஞானவசந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் தங்கவேல், சங்கீதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “2 பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலை”: சோகத்தில் மூழ்கிய ஊர்மக்கள் - நடந்தது என்ன?