Tamilnadu
சென்னையில் மழை சேதங்களை ஆய்வு செய்த ஒன்றியக் குழு; மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கம்!
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளாயின.
இதன் காரணமாக சென்னையில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்கு, ஒன்றிய அரசு உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு நேற்று தமிழகம் வந்திருந்த நிலையில், இன்று அவர்கள் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
முதலில், புளியந்தோப்பு வீரசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் பாதிப்பு அடைந்துள்ள தெருக்களின் புகைப்படங்கள், பொருந்திய பேனர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அழகப்பா சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரை பார்வையிட்ட மத்திய குழுவினர், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகர் சிவா இளங்கோ சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு இடங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் மத்திய குழுவினரிடம் விளக்கமாக தெரிவித்தார். அப்போது வருவாய் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் பனீந்தர் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், "ஒன்றிய அரசு அதிகாரிகள், சாலை பாதிப்பு, தண்ணீர் தேங்கி இருப்பது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்ததாகவும், அதேபோல் 15 மண்டலங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விவரங்கள் அவர்களிடன் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் மழையில் பாதிப்பின் போது, மாநகராட்சி சார்பில் முகாம்கள் அமைத்தது, உணவுகள் வழங்கப்பட்டது குறித்தும் மத்திய குழுவிடம் தெரிவிக்கப்பட்டது என்றும், சென்னையில் பல இடங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் புளியந்தோப்பு பகுதியில் தான் ஏழை மக்கள் அதிகம் வசிப்பதால் ஒன்றிய அரசு ஆய்வு செய்ய அந்த இடத்தை தேர்வு செய்ததாக கூறினார்.
அதேபோல் பாதிப்பு அடைந்துள்ள பகுதிகளில் நிரந்தர தீர்வுகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுள்ளதாக கூறிய ஆணையர், சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக மத்திய குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்
இந்நிலையில் 25, 26 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருவதாக கூறிய அவர், மாநகராட்சி சார்பில் மழைநீர் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!
-
“அயலகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தவெக அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?