Tamilnadu

”நிறைய பேச விரும்பவில்லை; செயலில் காட்டுகிறேன்” - சென்னை ஐகோர்ட் புதிய (பொ) தலைமை நீதிபதி பண்டாரி பேச்சு!

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக ஆர்.என் ரவி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் சென்னை நீதிமன்ற நீதிபதிகள், ஆன்லைன் வாயிலாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள்,மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோர் பொறுப்பு தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.

தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நேற்று முதல் தமிழ் கற்க தொடங்கியுள்ளதாகவும், தற்போதைக்கு "வணக்கம்" "நன்றி" என்ற இரண்டு வார்த்தையை தெரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தை தொடர்ந்து பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆன்மீகத்திற்கும் கோயில்களுக்கும் பெயர் பெற்றது தமிழ்நாடு எனவும், கலாச்சார ரீதியாகவயம் வரலாறு ரீதியாகவும் தமிழ்நாடு மேன்மையானது எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மீது காதல் கொண்டுள்ளதாகவும், தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கண்ட கனவு தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் நனவாகியுள்ளதாக தெரிவித்தார்.

வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ரதத்தின் இரு சக்கரங்கள், நீதி பரிபாலனத்திற்கு இரண்டு சக்கரங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்த அவர்,என் பணியில் பயமோ பாரபட்சமோ இருக்காது என உறுதிபட கூறினார். பேச்சை விட செயலில் காட்ட விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதி அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என கூறி நன்றி தெரிவித்தார்.

Also Read: ”ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் தகர்த்தெரிய முடியவில்லை” - தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி உருக்கம்!