Tamilnadu

அம்மா மருந்தகம் குறைப்பு?: பொய் குற்றச்சாட்டு சுமத்திய எடப்பாடி பழனிசாமி-புட்டுப்புட்டு வைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை மூடும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “நிதிச்சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்கள் முடிவு மூட முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்” என அபாண்ட அறிக்கை வெளியிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழக அரசு மூடி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முற்றிலும் தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சி அமைந்ததும் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக, கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126. இந்த ஆட்சி அமைந்தவுடன் இந்த எண்ணிக்கை 131 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழ் நாடுஅரசு 131 அம்மா மருந்தகங்களையும், 174 கூட்டுறவு மருந்தகங்களையும் ஆக மொத்தம் 305 மருந்தகங்களை நடத்தி வருகிறது.

மேலும், ஆண்டுக்கு 60 மருத்துவமனைகள் வீதம் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை துவக்குவதற்கு கடந்த சட்டப்பேர்வை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மையப்படுத்தி கொள்முதல் செய்வதன் மூலம் மருந்து மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலன் பெறுவதற்கும் கூட்டுறவுத்துறை ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “இந்தியாவுக்கு பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்”: அமெரிக்கா எச்சரித்தது ஏன் தெரியுமா?- மோடி ஆட்சியில் அவலம்!