Tamilnadu

இளம்பெண்ணின் கழுத்தில் சிக்கிய 7.5 செ.மீ தையல் ஊசி.. உயிரைக் காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை!

கோவை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2ஆம் தேதி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அந்த இளம்பெண்ணுக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்குக் கழுத்தில் தொடர்ந்து வலி இருந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவர்கள் CT ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்தனர்.

அப்போது அவரது கழுத்து தண்டுவட பகுதியில் 7.5 செ.மீ. தையல் ஊசி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இவரது குடும்பத்தினரிடம் இது குறித்து மருத்துவர்கள் கேட்டபோது, தையல் ஊசியை குத்தி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தையல் ஊதி மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அருகே இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்துள்ளது. இருப்பினும் தண்டுவட, ரத்தநாள, காதுமூக்கு தொண்டை அடங்கிய மருத்துவக் குழுவினர் அந்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து 7.5 செ.மீட்டர் நீளமுள்ள தையல் ஊசியை வெளியே எடுத்தனர்.

இதையடுத்து அந்தப் பெண் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் இனி அவரது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்த சிறப்பான சிகிச்சைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: ரூ.33 லட்சம்.. 213 சவரன் நகையுடன் மாயமான சிறுவன்.. 24 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் : நடந்தது என்ன?