Tamilnadu

பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்திறப்பு அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு அதிகரிக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போது நீர் இருப்பு 34.21 அடியாகவும், கொள்ளளவு 2,888 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

நீர் வரத்து 42,420 கன அடியாக உள்ளதாலும், அம்மாபள்ளி அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாலும் அந்த உபரி நீர் கூடுதலாக அணைக்கு வந்து சேரும் என்பதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கூடுதலாக விநாடிக்கு 35,000 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக உயர்த்தி திறக்கப்படும்.

எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Also Read: ”இன்னும் தமிழ்நாட்டில் மழை ஓய்ந்துவிடவில்லை” : நவ.,23 வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!