Tamilnadu

தடுப்பூசிகளை உங்ககிட்ட கொடுக்கிறோம்; நீங்க திண்டாட்டம் இல்லாம போடுங்க -அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு பதிலடி

பருவமழை மற்றும் பேரிடர் காலத்தில் தாய், சேய் நல சிறப்பு பணி செய்ததற்காக மருத்துவர் மற்றும் செவிலியர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அதன் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், "கடந்த 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது. இதில் 60 சதவீதம் சுகப்பிரசவம் ஆகவும் 40 சதவீதம் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 8 மருத்துவர்கள் 22 செவிலியர்கள் பணியாற்றி உள்ளனர்.

இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் 40% முதல் 45% வரை சிசேரியன் செய்யப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனையில் 55 முதல் 60 சதவீதம் சிசேரியன் செய்யப்படுகிறது. ஆனால், மேற்கிந்திய தீவுகளில் 20% மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது 80% சுகப்பிரசவம் ஆக உள்ளது.

Also Read: ”வடிகாலில் கரப்ஷன்; பாயும் விசாரணை கமிஷன்: உப்பை தின்னவன் தண்ணீர் குடிச்சுதான் ஆகணும்” - சேகர்பாபு சாடல்

முன்பெல்லாம் 100% சுகப்பிரசவம் மட்டுமே இருந்தது தற்போது அது குறைந்து கொண்டே வருகிறது. சிசேரியன் சதவீதம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதற்கு காரணம் பெற்றோர்கள் தங்களுக்கு தேவையான தேதிகளில் குழந்தையை பெற்றெடுப்பதற்காக வற்புறுத்துவது தான் காரணம்.

இதை ஊக்கப்படுத்த கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளோம். சிசேரியனை தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைக்கு கடிதம் எழுத உள்ளோம். ஆறு இடங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசரகால சிகிச்சை பிரிவு கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் பன்றிக் காய்ச்சல் தொடர்பாக 13 நபர்களை பரிசோதனை செய்ததில் இரண்டு நபர்களுக்கு உறுதியாகியுள்ளது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் கேரளா தமிழ்நாடு 13 எல்லையில் தொடர்ந்து அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு இருக்காது. தற்போது வரை 463 தற்போது டெங்கு வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தை இதுவரை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. ஆளுநர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கின்றார். தொடர்ந்து தமிழக அரசு இந்த விவகாரத்தை கண்காணித்து வருகிறது.

தமிழக அரசு தடுப்பூசிகளை வைத்துக்கொண்டு திண்டாடுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததற்கு - 1.25 கோடி தடுப்பூசியை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கொடுக்கிறோம். அவர் திண்டாட்டம் இல்லாமல் செலுத்தட்டும்" என தெரிவித்தார்.

Also Read: 2016-21 மார்ச் வரை; மதுரை சிறையில் ரூ.100 கோடி முறைகேடு - RTI மூலம் அம்பலமானது அ.தி.மு.கவின் மெகா ஊழல்!