
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.2.2026) இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையின் முதல் அலகு ரூ.900 கோடி செலவில் நிறுவப்பட்டு, திறந்து வைத்து ஆற்றிய உரை:-
நம்முடைய அன்புக்குரிய திரு. சந்திரசேகரன் அவர்கள் முதலில் உரையாற்றுகின்றபோது, இந்த நாள் டாடா குழுமத்திற்கு ஒரு பொன்னாள் என்று சொன்னார். டாடா நிறுவனத்திற்கும், இங்கு இருக்கக்கூடிய பணியாளர்களுக்கும் ஒரு பொன்னாள் என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு எடுத்துச் சொன்னார். உண்மை தான். ஆனால், ஒன்றை அவர் மறந்துவிட்டார்; எங்கள் தமிழ்நாட்டிற்கும் இது பொன்னாள். மன்னிக்கவும், நம்முடைய தமிழ்நாட்டிற்கும் இது பொன்னாள். குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறைக்கும் இது ஒரு பொன்னாள்.
அந்த வகையில், சிப்காட் பனப்பாக்கத்தில், டாடா JLR நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தித் திட்டத்தை தொடங்கி வைப்பதில், நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
டாடா குழுமம் தமிழ்நாடு மீது வைத்திருக்கும் நம்பிக்கை உள்ளபடியே பெருமையையும், மகிழ்ச்சியையும் நமக்கெல்லாம் அளிக்கிறது.அதுவும், 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகின்ற, இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை, இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
டாடா குழுமத் தலைவர் திரு. சந்திரசேகரன் அவர்கள், இங்கு பங்கேற்றிருப்பது எங்கள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் இருப்பது, அவருக்கு மட்டுமல்ல, நம்முடைய தமிழ்நாட்டிற்கே அது மிகப் பெரிய பெருமை!
அவரே குறிப்பிட்டுச் சொன்னார், 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், “விரைந்து இந்தப் பணிகளை முடித்து திறப்பு விழாவிற்கும் நீங்கள் வர வேண்டும்” என்று மரியாதைக்குரிய சந்திரசேகரன் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்திருந்தேன். அதை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இன்று அவர் நம்மிடையே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதற்கு மகிழ்ச்சி! அதற்காக மீண்டும் என்னுடைய நன்றியை நான் அவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். ஸ்டீல், I.T, ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள், ஹாஸ்பிட்டாலிட்டி, தொலைத்தொடர்பு… இப்படி, பல துறைகளில் தடம்பதித்து, மிகப் பெரிய சாதனைகளை படைத்திருக்கக்கூடிய நிறுவனம் தான் நம்முடைய டாடா குழுமம்!
உலக அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டு குழுமமாக டாடா நிறுவனம் இருக்கிறது! டாடா என்று சொன்னாலே அதற்கு ஒரு பிராண்ட் வேல்யூ உண்டு! அப்படிப்பட்ட டாடா நிறுவனத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆழமான உறவும் இருக்கிறது.
TCS நிறுவனம், தாஜ் ஹோட்டல்கள், டைட்டன், டாடா பவர், டாடா எலக்ட்ரானிக்ஸ் இவையெல்லாம் அந்த உறவுச் சரித்திரத்தின் பொன் ஏடுகள். டாடா நிறுவனம், தமிழ்நாட்டு மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பெருமைமிகு அடையாளங்கள்.
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழ்நாடுதான்! அதுமட்டுமா! மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான்! மோட்டார் வாகனத் துறையில், தமிழ்நாடு இன்றைக்கு ‘Top Position’-இல் இருக்கிறது என்றால், அதற்கு பெரிய பாரம்பரியம் இருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களின் திட்டங்களை எல்லாம் நிறுவியிருக்கிறார்கள். அதேபோல், டாடா மோட்டார்ஸ், உலகளவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகவும், மின் வாகனத் துறையில், ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது.
பன்னாட்டுத் தர வரிசைகளில் கடைப்பிடித்து, குவாலிட்டி மற்றும் நம்பகத்தன்மை மிக்க வாகனங்களை உள்நாட்டு சந்தைக்கும், உலக சந்தைக்கும் டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட பயணத்தின் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, இந்த ஆலையை நிறுவ நீங்கள் முன்வந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.
TATA–JLR ஆலை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டம்! ஏன் தெரியுமா? இந்த தொழிற்சாலையில், டாடா நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த ஜாகுவார் லாண்ட் ரோவர் சொகுசு கார்களை உற்பத்தி செய்யப் போகிறார்கள். உலகப் புகழ் பெற்ற ரேஞ்ச் ரோவர் Evoque தயாரிக்கப்பட்டு இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது.
உயர் தொழில்நுட்பங்களை தன்னகத்தே ஏற்று, உலக அளவில் எந்த நாட்டின் தயாரிப்புகளோடும் போட்டியிடக்கூடிய வாகனங்களை உருவாக்கும் திறன் தமிழ்நாட்டிற்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவதாக இந்த ஆலை அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வேறு எங்கும் பார்க்க முடியாத ஒரு தனித்தன்மை உண்டு! அது என்னவென்றால், அனைத்து மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்த மாநிலம் என்பதுதான்! இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தயாரிப்புகள், உலக சந்தைகளுக்கும் சேர்த்தே தயாரிக்கப்படுகிறது என்பதற்கான பெருமைமிகு அடையாளம்தான் இந்த ஆலை!
வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் நாம் நுழைந்து சிறப்பாக செயல்பட வேண்டும். ஏற்கனவே, நாம் லீடராக இருக்கும் துறைகளில், மேலும் உயர்ந்த தரத்தையும், இன்னும் பெரிய சாதனைகளையும் Achieve செய்ய வேண்டும். இதற்காகத்தான் ஸ்பெஷல் கவனத்துடன் திராவிட மாடல் அரசு உழைத்துக்கொண்டிருக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் வாகனம், டெக்ஸ்டைல், I.T, R&D, G.C.C என்று பன்முகப்படுத்தப்பட்ட மாநிலமாக உலக அரங்குகளில், தமிழ்நாடு தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறது. என்னை பொறுத்தவரை, தொழில்துறை அமைச்சருக்கு நான் எப்போதும் சொல்வது, MoU Sign மட்டும் செய்தால் போதாது, அதை ஃபாலோ செய்து, முதலீடாக மாற்ற வேண்டும்! அப்படி, முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல, அதை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்! அப்போதுதான் நாம் பெருமைப்பட முடியும். அப்படித்தான் நம்முடைய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செயல்பட்டு வருகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் நான் தொடர்ந்து திறந்து வைத்துக்கொண்டிருக்கும் தொழில் திட்டங்கள்! அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
சில நாட்களுக்கு முன்பு. கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி ஆலையை திறந்து வைத்தேன். இப்போது இந்த டாடா JLR ஆலை! 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் இந்தத் திட்டத்திற்கான (MOU) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டோம். சிப்காட் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, சில மாதங்களிலேயே 1207 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார்கள். இது ஒரு மிகப் பெரிய சாதனை. ஆறே மாதத்தில் செப்டம்பர் 2024 இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம். 18 மாதங்களில் முடிக்கலாம் என்று நம்முடைய திரு. சந்திரசேகரன் அவர்கள் சொன்னார்; நான் இப்போது 16-வது மாதத்திலேயே முடித்து இப்போது தொடக்க விழாவையும் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுதான் பெரிய பெருமை!
இதேபோல, தூத்துக்குடியில், வின்ஃபாஸ்ட் நிறுவனமும் அடிக்கல் நாட்டிய 16-வது மாதத்திலேயே உற்பத்தியை தொடங்கிவிட்டார்கள். இது போன்ற பெரிய பிராஜக்ட் எல்லாம் தொடங்க வேண்டும் என்றால், பொதுவாக 3 அல்லது 4 வருடங்கள் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில், இந்த காலகட்டத்தை நாங்கள் பாதியாக குறைத்திருக்கிறோம். தமிழ்நாடு எந்தளவிற்கு தொழில் செய்ய உகந்த, எளிமையான மாநிலமாக இருக்கிறது என்பதற்கு, இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
இதை நான் விரும்புவது, தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய இளைஞரிடத்தில் கேட்டேன். டிப்ளமோ முடித்த நம்முடைய இளைஞர்கள் பலர் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லோரும் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின், ‘லட்சியா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுகிறார்கள். அந்த கையேட்டை கூட என்னிடத்தில் சந்திரசேகரன் அவர்கள் வழங்கினார்கள். இந்த திட்டத்தில் வேலை செய்துகொண்டே, பி.டெக்., பட்டம் படிக்கவும் இந்த நிறுவனமே உதவி செய்கிறார்கள்.
இந்த தருணத்தில் இன்னொரு செய்தியையும் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகத்திற்கு எடுத்து சொல்ல, ‘முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு’, அதாவது, ‘Conversion Conclave’ இன்னும் சில நாட்களில் நடத்தப் போகிறோம். கிட்டத்தட்ட 100 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதை நீங்கள் அப்போது தெரிந்துகொள்வீர்கள். திட்டங்களை தொடங்கி வைப்பது, அடிக்கல் நாட்டுவது என்ற வகையில், MoU கன்வெர்ஷனில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்று வெளிப்படுத்தப் போகிறோம்!
தமிழ்நாட்டின் விரைவான செயல்பாடுகள், குறித்த நேரத்தில் கிடைக்கின்ற அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள், வணிகம் புரிவதை எளிதாக்கும் செயல்பாடுகள் எல்லாவற்றையும், இந்த மாநாட்டில் காட்டப் போகிறோம். தமிழ்நாடு அரசு ஒரு கேரண்டி கொடுத்தால், அதை எப்படி காப்பாற்றுகிறோம் என்று உலக முதலீட்டாளர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்கு போட்டி மாநிலம் என்பதையெல்லாம் தமிழ்நாடு எப்போதோ க்ராஸ் செய்துவிட்டது. இப்போது உலக நாடுகளே தமிழ்நாட்டுடன் போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது!
இது, நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய முன்னேற்றம். இந்த சிறப்பான தருணத்தில், இந்திய வாகனத் துறையின் வளர்ச்சிக்கும், இந்திய மிடில் க்ளாஸ் குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றவும், மறைந்த
திரு. ரத்தன் டாடா அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை மிகுந்த மரியாதையுடன் நான் நினைவுகூர விரும்புகிறேன். அவர் கண்ட கனவுப்படியே, டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் இந்த முதலீடு, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் ‘புதிய எரிசக்தி வாகனத் துறை’யின் வளர்ச்சிக்கு வலுவான ஊக்கமாக அமையும்.
இந்த விழா மூலமாக நாம் பெற்றிருக்கும் நல்லுணர்வை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், டாடா குழுமம், தனது பல்வேறு தயாரிப்புகளுக்கான முக்கிய உற்பத்தி மையமாக தொடர்ந்து தமிழ்நாட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம். எந்தத் துறையில் நீங்கள் முதலீடு செய்தாலும், அதற்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குவோம்! திட்ட செயல்பாடுகளை எளிமையாக்கி, அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்! திராவிட மாடல் அரசை நீங்கள் முழுமையாக நம்பலாம்.
எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் முதலீடுகளை யார் மேற்கொள்ள வந்தாலும், அவர்களை திறந்த மனதோடும், திறந்த கரங்களோடும் தமிழ்நாடு நிச்சயமாக வரவேற்கும்.
தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும்! அதுதான் எங்கள் பண்பாடு! அதுதான் எங்கள் பாரம்பரியம்! தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது! பொருளாதார வளர்ச்சியுடன் சமூகநீதியை உள்ளடக்கியது! பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது! எங்களின் இந்த நல் முயற்சிகளுக்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்!
நிறைவாக, மதிப்பிற்குரிய சந்திரசேகரன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நீங்கள் டாடா நிறுவனத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறீர்களோ, அதே அளவு தமிழ்நாட்டையும் நேசிக்கிறீர்கள் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்! ஏனென்றால், நீங்கள் தமிழ்நாட்டின் நாமக்கல்லைச் சேர்ந்தவர் என்ற உரிமையுடன் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்னும் பல புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி - மேம்பாட்டு திட்டங்களையும் நீங்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அடுத்த போர்டு மீட்டிங்லேயே இது தொடர்பாக முடிவெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் நாங்கள் நிச்சயம் செய்து தருவோம். வேறு எந்த மாநிலத்தையும் விட சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், அமைதியான சூழல், வெளிப்படையான நிர்வாகம் கொண்ட தமிழ்நாடுதான், எப்போதும், எதிலும் டாடா-வின் ‘முதல் சாய்ஸ்’-ஆக இருக்க வேண்டும் என்று கேட்டு, விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






