Tamilnadu

”33%க்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உதவித்தொகை உண்டு” - அமைச்சர் ராமச்சந்திரன் நற்செய்தி!

மழையால் 33 சதவீததிற்கும் மேல் பாதிக்கபட்ட பயிர்களுக்கு நிவாரணம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னையில் தற்போது மழை முழுவதுமாக நின்றுள்ளது. மழை நீரை ராட்சத இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நாளை மாலைக்குள் முழுமையாக மழைநீர் அகற்றப்படும் என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 250 முகாம்களில் 14,135 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், சென்னையில் 2,699 நபர்கள் சிறப்பு முகாம்களில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை பாதிப்பால் 174 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்பு 18ஆக குறைந்தாக தெரிவித்தார். மேலும் முதல்வர் தொடர்ந்து களத்தில் இருந்து பணியாற்றி வருவதாக கூறினார்.

நாங்கள் எதிர்கட்சியாக இருந்த காலத்திலிருந்து புயல், கொரோனா என அனைத்து பாதிப்பு நேரத்திலும் களத்தில் இருந்தோம். ஆனால் தற்போது எதிர்கட்சியை சார்ந்த எவரும் களத்திற்கு வருவதில்லை என கூறினார்.

மழையால் 33% மேல் பாதிக்கபட்ட பயிர்களுக்கு நிவாரணம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், மழையால் பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்று கூறினார்.

Also Read: “1.45 லட்சம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியது”: பயிர் சேதம் குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!