Tamilnadu

“யானை வெடிகளை மூட்டையில் எடுத்துச் சென்ற போது வெடி விபத்து” : தந்தை - மகன் உடல் சிதறி பரிதாப பலி!

புதுவை காக்காயன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன். இவரும் இவரது மகன் பிரதீப் குமாருடன் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வந்துக்கொண்டிருந்தார்.

இவர்களது இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளுடன் வந்து கொண்டிருந்தனர். இதில் பட்டாசு மூட்டைகள் மீது அந்த சிறுவன் அமர்ந்திருந்து கூனிமேடு கிராமத்திற்கு அருகில் வந்துக்கொண்டிருந்த போது, இவரது இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது.

இதில் கலைநேசன் வாகனத்தில் இருந்த பட்டாசு பண்டல்கள் தீ பிடித்து பயங்கர வெடி சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இதில் 7 வயது சிறுவன் பிரதீப் மற்றும் அவனது தந்தை களைநேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக பலியாகினர்.

வெடிவிபத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோர சம்பவத்தில் அருகில் இருந்த லாரி, 3 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தது. மேலும் 3க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜி பாண்டியன் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் போலிஸார் மற்றும் புதுச்சேரி முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, காலாப்பட்டு போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலிஸார் சாக்கு மூட்டைகளில் இந்த விபத்தில் சிதறிய உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “தலைதீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்த கர்ப்பிணி பெண் பரிதாப பலி” : சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!