Tamilnadu

“வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டால் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

நடிகர் சூர்யா நடிப்பில் டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’. நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் ஜெய்பீம் வெளியாகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், “பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!

நடிகர் சூர்யா, வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை நேற்று பார்த்தேன். அத்திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய சூர்யா அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்! படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! ‘ஜெய்பீம்’ போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்!” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் இந்த பதிவுக்கு ட்விட்டரில் நடிகர் சூர்யா நெகிழ்ந்து வெளியிட்டுள்ள பதிவில், “வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!” எனத் தெரிவித்திருந்தார்.

Also Read: “ ‘ஜெய்பீம்’ படத்தின் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக்கிவிட்டன” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!