Tamilnadu

தொண்டையில் சிக்கிய கோலிக் குண்டு.. 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் அகற்றிய அரசு மருத்துவமனை!

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மகன் அஸ்வின். சிறுவன் அஸ்வின் நேற்று முன்தினம் நண்பர்களுடன் தெருவில் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அஸ்வின் கோலி குண்டை ஒன்று வாயில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அது திடீரென அவரது தொண்டைக்குள் கோலி குண்டு சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவன் வலிதாங்க முடியாமல் துடித்துள்ளார்.

பிறகு, உடனே சிறுவனை மீட்டு, அப்பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் சிறுவனைப் பரிசோதித்து விட்டு மேல் சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிறுவன் அஸ்வினுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. இதில் கோலி குண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் என்டோஸ்கோபி முறையில் 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையின்றி கோலி குண்டை வெளியே எடுத்தனர்.

இதையடுத்து சிறுவன் அஸ்வினுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் தெரித்துள்ளது. சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு அவரது பெற்றோர்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டினர். மேலும் பலரும் அரசு மருத்துவமனை ஊழியர்களை பாராட்டி வருகின்றனர்.

Also Read: "சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயம்" : மறுத்த தனியார் மருத்துவமனை - அகற்றி காட்டிய அரசு மருத்துவமனை!