Tamilnadu

கொசு மருந்தை குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு.. சென்னையில் சோகம்.. சிகிச்சையளிக்க மறுத்தவர் மீது புகார்!

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். 3 வயதாகும் இவரது குழந்தை கிஷோர் நேற்று இரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

அப்போது, வீட்டிலிருந்த 'ஆல் அவுட்' கொசு மருந்தை சாப்பிடும் பொருள் என நினைத்துத் தவறுதலாக குழந்தை குடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழரசன் உடனே கிஷோரை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையைக் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதனைத் தொடர்ந்து தமிழரசன், முதலில் கொண்டு சென்ற தனியார் மருத்துவமனை மருத்துவர் சுபாஷ் என்பவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், அவர் வேறு ஒரு மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து மருத்துவம் பார்த்து வருவதாகவும், இவரால்தான் எனது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள போலி மருத்துவர் சுபாஷை தேடிவருகின்றனர். 'ஆல் அவுட்' குடித்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை : விசாரணையில் வெளிவந்த 'பகீர்' தகவல்!