Tamilnadu

சிக்கிய சசிகலாவின் பினாமி... முறைகேடுகளில் ஈடுபட்டு கோடி கோடியாக சொத்துக் குவித்த அசோகன் யார்?

வருமானத்திற்கு அதிகமாக 63% சொத்து சேர்த்ததாக திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அசோகனின் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் கடந்த 2013 நவம்பர் முதல் 2016 நவம்பர் வரை பணிபுரிந்தவர் அசோகன். அவர் பணியாற்றிய காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத 6 பேரை போலி ஆவணங்கள் மூலம் பணியாற்றியதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இவர் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் தேர்வுத்தாளை வாங்க டெண்டர் விடாமலும், தமிழ்நாடு அரசின் டி.என்.பி.எல்.லில் வாங்காமலும் ராஜஸ்தானில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வாங்கி அசோகன் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

6 ஆண்டுகள் மாணவர்கள் எழுதிய பழைய தேர்வு தாளை தனது நண்பருக்கு குறைந்த விலைக்கு விற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் வருமானத்திற்கு அதிகமாக 63% சொத்து சேர்த்ததாக அசோகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திருவாரூர் அருகேயுள்ள மேலஇருக்காட்டூர் மற்றும் வேலூரில் உள்ள அசோகனின் வீடுகளில் 12 மணி நேரம் சோதனை நடந்தது. அப்போது பல கோடி மதிப்பு கொண்ட சொத்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர் அசோகன். அந்த தொடர்பின் மூலமே அவர் உயர் பதவிகளையும் பெற்றுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில் குழப்பம் ஏற்பட்டு கூவத்துார் பங்களாவில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டபோது அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தவர் இவர்தான் எனக் கூறப்படுகிறது.

அசோகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து பத்திரங்களை மதிப்பிடும் பணிகள் நடந்து வருகின்றன. பினாமி முறையில் சொத்துகள் உறவினர்கள், நண்பர்கள் பெயரில் உள்ளதா என விசாரணை நடந்து வருவதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Also Read: OPS பெயரில் தொடரும் பண மோசடி.. 47 லட்சம் பணத்தை பறிகொடுத்த இளைஞர் : அ.தி.மு.க முக்கிய புள்ளிக்கு தொடர்பா?