Tamilnadu

லீஸ் காலம் முடிந்தும் ஆக்கிரமிப்பை தொடர்வதா? குயின்ஸ் லேண்ட் நிலத்தை உடனடியாக மீட்க ஐகோர்ட் அதிரடி ஆணை!

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில் பூங்கா அமைந்துள்ள இடத்தில், 21 ஏக்கர் கோவில் நிலம் என்று கூறி ஆக்கிரமித்த இடத்திற்கான குத்தகை தொகையை வழங்க கோரி, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட்டிருந்தது.

நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்து இந்த வழக்கு , நீதிபதிகள் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், கடந்த 1995 ம் ஆண்டில், சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்கு, குத்தகைக்கு விடப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் கோவில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு, குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவற்றின் குத்தகை 1998 இல் முடிவடைந்துவிட்டதாக சுட்டிகாட்டப்பட்டது . மேலும் 1998 க்குப் பிறகு குயின்ஸ்லேண்ட் அத்துமீறி ஆக்கிரமித்திருந்ததாகவும், வாதிடப்பட்டது. வருவாய்த் துறையினருக்கும், இந்து அறநிலையத்துறைக்கும்மிடையே உள்ள பிரச்சனையை, தங்களுக்கு சாதகமாக குயின்ஸ் லேண்ட் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

வழக்கை விசாரித்த நீதிபதிகள் குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்து உள்ள கோவில் நிலங்களை 4 வாரத்தில் மீட்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். மேலும் அந்த நிறுவனம் வருவாய் துறைக்கு 1 கோடியே 8,69,423 ரூபாய் தொகையையும் ,அதேபோல் கோவிலுக்கு 9.5 கோடி ரூபாயையும் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: ‘சீக்கிரம் நடங்க பாஸூ’.. குழியில் சிக்கிய யானை குட்டி: 7 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை