Tamilnadu

கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.. வீதியில் இறங்கிய அமெரிக்க பெண்கள் - என்ன காரணம்?

உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் “கருக்கலைப்பு சட்ட விரோதம்” என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணமும் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் படி, கருவில் சிசுவின் இதயதுடிப்பு உணரப்பட்டால், அதற்குப் பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி இல்லை. மேலும், ஒருவேளை கருக்கலைப்பு செய்வதாக இருந்தால், உரிய அனுமதி பெற்று சிசு உருவாகுவதற்கு முன்னதாகவே கருக்கலைப்பு செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்தச் சட்டம் அம்மாகாண மக்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்தச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என அங்குள்ள பெண்கள் அமைப்பினர் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையிட்டனர். ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

இதனால் பெண்கள் தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். அதன் ஒருபகுதியாக வாஷிங்க்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள், கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமை என்று முழக்கங்களுடன் பேரணியாக சென்றனர்.

இதேபோல், ஹூஸ்டன் நியூ யார்க், டெக்ஸ்சாசிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமெரிக்காவின் உச்சநீதிமன்ற வாயிலில் ஏறி “என் உடல் என் உரிமை” என்றும் பெண்கள் முழக்கமிட்டனர்.

அமெரிக்காவின் முன்னணி பாடகியும் நடிகையுமான பெட்டே மிட்லர் ‘செக்ஸ் ஸ்ட்ரைக்’ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பின்னணியில் இன்று அமெரிக்காவின் பல பகுதியில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கருவில் சிசுவின் இதயத்துடிப்பு உணரப்பட்ட காலத்திற்குப் பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி இல்லை என சட்டத்தில் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு கருவின் இதயத்துடிப்பை உணரவே 6 வாரங்கள் ஆகும். இதனால் கருக்கலைப்பு என்பதே இல்லாமல் போய்விடும். இப்படி பெண்களை வஞ்சிக்கும் கடுமையான சட்டங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதி” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இனி ஆண்களுடன் உடலுறவு கிடையாது” : அமெரிக்க பெண்களின் ‘Sex Strike’ - பின்னணி என்ன?