Tamilnadu

கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய மனைவி.. திருமணமாகி 4 மாதத்தில் நடந்த கொடூரம் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம் போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருக்குக் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நந்தினி என்று பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த புதிய தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தரகாறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 20ம் தேதியிலிருந்து பாண்டித்துரை காணவில்லை என குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பாண்டித்துரையின் தாயார் மீனாட்சி, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டித்துரையை தேடிவந்தனர். மேலும் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தி வந்தனர். அப்படி பாண்டித்துரையின் மனைவியிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கணவனைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாக நந்தினி கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த மாதம் 20ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாண்டித்துரை மனைவி நந்தினியின் கழுந்தை நெரித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த அவர் அருகே இருந்து கத்தியை எடுத்து கணவன் மீது குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் பதட்டமடைந்த நந்தினி யாருக்கும் தெரியாமல் கணவனின் சடலத்தை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசியுள்ளார். பிறகு கணவர் காணவில்லை என கூறி குடும்பத்தாருடன் சேர்ந்து இவரும் கணவரைத் தேடுவதுபோல் நடித்துள்ளார்.

பின்னர், போலிஸார் நந்தினி கூறிய கிணற்றிலிருந்து பாண்டித்துரையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலிஸார் நந்தினியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர்” : போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!