Tamilnadu

போலி ஆவணம்; ஆள்மாறாட்டம்; நிலங்களை அபகரித்து சொகுசு வாழ்க்கை - சென்னையில் பிடிபட்ட ஆசாமிகள்!

சென்னை எழும்பூர் வேப்பேரி அமைந்துள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த தேவிகா என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் தேவிகா தனக்கு சொந்தமான 2,373 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தையும், புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் சேகர் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தையும், ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான 2,145 சதுர பரப்பளவு கொண்ட இடம் மற்றும் அஜய் பொன்னுமணிக்கு சொந்தமான 4,800 சதுர பரப்பளவு கொண்ட நிலங்களை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து அபகரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் , சென்னை, புத்தகரம், திருவள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்த இன்பா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பாண்டுர் டாக்டர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த டேவிட் வாலிஸ் (26) ஆகிய இருவரும் சென்னை புறநகர் பகுதியிலுள்ள பல்வேறு காலியிடங்களின் பத்திர நகல்களை பெற்று ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பு செய்து நிலத்தை விற்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் காலி இடங்களில் பத்திர நகல் எவ்வாறு இவர்களுக்குக் கிடைத்தது என்ற கோணத்திலும் ஆள்மாறாட்டம் செய்ய உதவியவர் நபர்கள் குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.