Tamilnadu

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் திடீர் திருப்பம்... வேறொரு பெண்ணுடன் மாயமான கணவன்!

திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்குப் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனைப் பிரிந்து திவ்யா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திவ்யாவின் அம்மா வீட்டிற்கு வந்த சத்தியமூர்த்தி கோவிலுக்குச் செல்லலாம் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது கொட்டாவூர் அருகே காலி இடத்தில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட சத்தியமூர்த்தி, “சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதால், மனைவியைக் கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனவே என்னைத் தேடாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சத்தியமூர்த்தியைத் தேடிவந்த நிலையில் அவர் வேறு ஒரு பெண்ணுடன் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமூர்த்தியின் மனைவி திவ்யாவின் தாய்மாமன் மகள் அர்ச்சனாவைக் காணவில்லை என போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில், சத்தியமூர்த்தி திருப்பூரிலிருந்து காரில் வந்து மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்தி பின்னர் அர்ச்சனாவுடன் மாயமானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: “தாய் உயிரிழந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்து மகன் தற்கொலை” : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !