Tamilnadu
ராணுவ வீரரின் பண்ணை வீட்டை அபகரித்து கொலை மிரட்டல் : நாகை அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேருக்கு வலைவீச்சு!
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உட்பட்ட அம்பல் கிராமத்தைச் சேர்ந்த ராணி பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற ராணுவ வீரர் சிவானந்தம் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சிவானந்தம் ராணுவத்தில் பணிபுரியும் போது வீரமரணம் அடைந்துள்ளார்.
இதனால் கணவரை இழந்த ராணி அவரது நினைவாக (அம்பல் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில்) சொந்த ஊரில் அவரது அஸ்தியை கொண்டு மணிமண்டபம் அமைத்து ஆண்டுதோறும் குடும்பத்தினருடன் வந்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வழிபாடு செய்து வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநராக பணியில் சேர்ந்த அப்பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி சத்தியன் பல கோடி மதிப்பிலான சொத்தை ராணியிடம் மூளைச்சலவை செய்து பெயர் மாற்றம் செய்துள்ளார். தமிழில் பேசத்தெரிந்த ராணிக்கு தமிழ் எழுத்துக்களை படிக்க முடியாதது என்பதை அறிந்து பண்ணை வீட்டையும் தோட்டத்தையும் கவனித்து வந்த ஓட்டுநர் சத்தியன் ராணியின் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எதுவும் அறியாத ராணி கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் போது சத்தியன் தனது குடும்பத்தோடு பண்ணை வீட்டில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராணி கேள்வி கேட்கும்போது திருமருகல் ஊராட்சி ஒன்றிய அதிமுக துணைத்தலைவர் திருமேனி அடியாட்கள் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வீட்டை அடித்து நொறுக்கி ராணியின் இரண்டு சொகுசு கார்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
மேலும் ஏடிஎம் கார்டினை பயன்படுத்தி 11 லட்சம் ரொக்கப் பணம், வீட்டிலிருந்த 22 பவுன் தங்க நகை உள்ளிட்ட முக்கிய கோப்புகளையும் அதிமுக பிரமுகர் திருமேனி தலைமையில் அதிமுகவினர் எடுத்து சென்றுள்ளனர். தற்போது அதன் காட்சிகள் மற்றும் அதிமுக திருமருகல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் திருமேனி ராணியிடம் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
இதைத்தொடர்ந்து திருக்கண்ணபுரம் காவல்துறையினர் ராணியிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டு அதிமுக பிரமுகர் திருமேனி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த அதிமுக பிரமுகர் திருமேனி, சத்தியன் உள்ளிட்ட 6 பேர் தப்பியோடி தலைமறைவாகி உள்ளனர்.
செவாலியர் விருது பெற்ற மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கே இந்த நிலை என்றால் அதிமுக ஆட்சி காலத்தில் சாமானிய மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்து அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!