Tamilnadu

மகன் கொலைக்குப் பழிவாங்கச் சதி திட்டம் தீட்டிய குடும்பம்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு பகுதி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் சரவணன் என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய மணிகண்டன், ஷாம், அஜித், விஜய் ஆகிய நான்கு பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சரவணனைக் கொலை செய்த நான்கு பேரையும் சிறையிலேயே வைத்து கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவு போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நொச்சி நகரில் வசித்து வரும் சரவணனின் தந்தை முருகேசன், சகோதரர் முருகன், கார்த்திக், பிரவீன்குமார் ஆகியோரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் மகன் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக நான்கு பேரையும் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் கொலை செய்வதற்காகக் கண்ணகி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் நாட்டு வெடிகுண்டு, பட்டாக்கத்திகளை வாங்கி பதுக்கிவைத்துள்ளனர். இதை அவர்களிடமிருந்து போலிஸார் பறிமுதல் செய்தனர். பிறகு கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய நான்கு பேரையும் மயிலாப்பூர் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ராணுவ வீரரின் பண்ணை வீட்டை அபகரித்து கொலை மிரட்டல் : நாகை அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேருக்கு வலைவீச்சு!