Tamilnadu

"கழுவுகிற மீனில் நழுவும் மீன்கள் நாங்களல்ல” : எழுவர் விடுதலை விவகாரத்தில் OPSக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிப்படி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சரின் நடவடிக்கைகள் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போன்று உள்ளது என்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிக்கைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைவிட வேறு யாரும் அதிக அக்கறை செலுத்த முடியாது எனப் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் தி.மு.க கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஏழு பேர் விடுதலை விவகாரத்தை தி.மு.க ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யாது. நீர்த்துப்போகவும் விடமாட்டோம்.

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைவிட வேறு யாரும் அதிக அக்கறை செலுத்தமுடியாது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கழுவுற மீனில் நழுவுற மீன் நான் அல்ல. நாங்கள் மிக நேர்மையானவர்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் அநீதி; அதிமுக அரசால் 4 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழக மாணவர்கள்!