Tamilnadu

"கட்டும்போதே இடிந்து விழுந்த நீர்த்தேக்க தொட்டி” : அவசரகதியில் டெண்டர் விட்டு மாட்டிக்கொண்ட ஓ.எஸ்.மணியன்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் அரசு டெண்டர்களை தங்கள் உறவினர்களுக்கே வழங்கி, அவர்கள் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு தரமற்ற வகையில் பணிகளை செய்ததால் பல இடங்களிலும் கட்டுமானங்கள் சிலகாலத்திலேயே இடிந்து விழும் அவலம் தொடர்கிறது.

வேதாரண்யத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முதல் நாள் அவசர கதியில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளருக்கு டெண்டர் விடப்பட்டு கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கத் தொட்டி இடித்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அவரிக்காடு ஊராட்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் இறால் குட்டை அமைக்கப்பட்டுள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அவரது ஆதரவாளர் இப்பகுதியில் இறால் குட்டை அமைத்துள்ளதால் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீருக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக பரிதவித்து வந்தனர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முதல் நாள் (24ஆம் தேதி) அப்பகுதி மக்களின் வாக்குகளை சேகரிக்க அவசரகதியில் ரூபாய் 59 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு அப்பணியை, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதே நாளில் தொடங்கி வைத்தார்.

கடல் முகத்துவாரமான அடப்பாறு, நல்லாறு கிளை வாய்க்காலில் உவர்ப்பு நீரை உறிஞ்சி சுத்தரிக்கப்பட்ட குடிநீராக அப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான கட்டுமான பணிகளில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர்கள் தரமற்ற முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில் அதன் நடுவே அமைந்துள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தும் சுவற்றில் விரிசல் ஏற்பட்டும் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் செல்வராஜ், ராஜூ ஆகியோர் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்ததன் பேரில் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்கும் திட்டத்திலும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து.. கே.சி.வீரமணிக்கு ஆப்பு? - ஒரே நேரத்தில் 28 இடங்களில் அதிரடி சோதனை!