Tamilnadu

வாலிபரின் தலையை வெட்டி சாய்த்துவிட்டு கண்ணிமைக்கும் எஸ்கேப் ஆன மர்ம நபர்கள் : திருப்பெரும்புதூரில் பகீர்!

திருப்பெரும்புதூர் அடுத்த எருமையூர் அருகில் தர்காஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வாலிபரின் தலையை வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் வயது 23. தர்காஸ் பகுதியில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலய வளாகத்தின் அருகே நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெற்றிவேலின் வெட்டப்பட்ட தலையை எடுத்து வந்து வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதே பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நடுவீரப்பட்டு ராம்ஜி நகரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அபிஷேக்கை சச்சின் மற்றும் அவரது கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி சாய்த்துவிட்டு உடனே இருசக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சென்ற சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. தலையில் பலத்த வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த அபிஷேக் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.

அதே இடத்தில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வெற்றிவேலின் தலையை வெட்டி சாய்த்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விட்டனர். இதை பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனே சோமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர் திருப்பெரும்புதூர் டிஎஸ்பி மணிகண்டன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இரவு முழுவதும் முண்டத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில் வெற்றிவேல் உடலை எருமையூர் தர்காஸ் அடுத்த சித்தேரி பகுதியில் உள்ள ஏரி அருகே காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைத்து பல கோணத்தில் விசாரணை செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கண்டுபிடிக்குமாறு தனி படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: இளம்பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய கும்பல்.. 1 வருடத்திற்குப் பிறகு வெளியான வீடியோ: நடந்தது என்ன?