Tamilnadu

‘செப்., 13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்.. நிச்சயம் விலக்கு பெறுவோம்” : அமைச்சர் மா.சு பேட்டி!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் செப்., 13ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு அரசு விரும்பாத, தமிழக முதலமைச்சரின் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நிகழ்வாகத்தான் நீட் தேர்வு நடக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சட்டமன்ற முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான 13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல, அந்த தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே கடந்த அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி, அவரிடத்தில் எந்தவிதமான அழுத்தமும் தராமல் விட்டுவிட்டனர்.

அதுபோலன்றி, நிச்சயம் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி, போதுமான அழுத்தம் தந்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தனிநபர் மசோதா தாக்கல்.. அவையில் பெருகும் ஆதரவு” : அசத்தும் தி.மு.க எம்.பி!