Tamilnadu

"ஆஃப் பாயிலுக்கு போரா..? பெரிய அக்கப்போரால்ல இருக்கு..” : ஹோட்டலை நொறுக்கிய 2 போலிஸார் சஸ்பெண்ட்!

தஞ்சாவூரில் ஆஃப் பாயில் வர தாமதமானதால் ஹோட்டலை சூறையாடிய 2 போலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் (45), திருவிடைமருதூரில் காவலராக பணியாற்றி வரும் அருண்குமார் (30), எலக்ட்ரீசியன் விஜி (35) ஆகியோர் இரவு மது அருந்திவிட்டு, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடச் சென்றுள்ளனர்.

ஹோட்டலுக்குச் சென்ற அவர்கள் ஆஃப் பாயில் ஆர்டர் செய்துள்ளனர். இரவு ஹோட்டலை மூடும் நேரம் நெருங்கியதாலும், வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், அவர்களுக்கு ஆஃப் பாயில் வழங்க தாமதமாகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 3 பேரும், அங்கிருந்த ஹோட்டல் உரிமையாளர் ராம்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதுடன், நாற்காலிகளை எடுத்து வீசி ஹோட்டலை அடித்து நொறுக்கினர்.

மேலும், அங்கிருந்த ராம்குமாரின் மகன் மீது சாம்பாரை கொட்டியதுடன், இதைக் கண்டித்த ராம்குமாரின் மனைவியையும் அவர்கள் தாக்கிவிட்டு ங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது, விஜி காரை ரிவர்சில் எடுத்தபோது, கார் மோதியதில் அருண்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராம்குமார் அளித்த புகாரின் பேரில், பாலசுப்பிரமணியன், அருண்குமார் ஆகியோரை தஞ்சாவூர் பல்கலைக்கழக போலிஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜியை தேடி வருகின்றனர்.

இதையடுத்து தகராறில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அருண்குமார் ஆகியோர் மாவட்ட எஸ்.பி ரவளிப்ரியா உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: “செப். 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்” : தமிழ்நாட்டு மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு!